AMAZING SPECIES

Thursday, April 16, 2015

குறையை நினைத்து மூலையில் முடங்கியதில்லை! 
ஜெயஸ்ரீயின் உலகில் அர்த்தமற்ற இரைச்சல்களுக்கு இடமில்லை. அனாவசிய கூக்குரல்கள் கிடையாது. தீயவற்றைக் கேட்கத் தேவையில்லாத ஜெயஸ்ரீ, சொல்கிற அத்தனை விஷயங்களுமே ஒவ்வொருத் தரும் காது கொடுத்துக் கேட்க வேண்டியவை. கேட்கும் திறனற்ற ஜெயஸ்ரீயின் குரல், தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் உலக மறு மலர்ச்சிக்காக தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

‘‘பிறக்கும் போது சாதாரணமா எல்லாரையும் போல கேட்கும் திறனோடதான் இருந்தேன். சாதாரண ஸ்கூல்லதான் படிச்சேன். ப்ரைமரி காம்ப்ளக்ஸ் வந்தது. அதுக்காக டாக்டர் பெனிசிலின் ஊசி போட்டதுல ரெண்டு காதும் கேட்காமப் போயிடுச்சு. அதாவது, 100 சதவிகிதம் கேட்காமப் போச்சு. ‘டாக்டர் நல்லாகணும்னுதானே அந்த ஊசியைப் போட்டிருப்பார்... வேணும்னேவா செய்திருப்பார்’னு எங்கம்மாவும் அப்பாவும் அதைப் பெரிசுபடுத்தலை. அந்த சின்ன வயசுல எனக்கு இருந்த அந்த மழலைக் குரல் இப்ப வரைக்கும் அப்படியே நின்னுடுச்சு...’’ என்கிற ஜெயஸ்ரீ, அடுத்து சந்தித்தவை துயரங்களின் தொடர்கதை.

‘‘கேட்கும் திறன் இல்லாதவங்களுக்காக சிறப்புப் பள்ளி இருக்குங்கிற விவரம்கூட அப்போ எங்கம்மா, அப்பாவுக்குத் தெரியலை. அதனால 10வது வரைக்கும் நான் சாதாரண ஸ்கூல்லயே படிச்சேன். மற்ற ஊனங்கள் எல்லாத்தையும் பார்த்த உடனேயே தெரிஞ்சுக்கலாம். ஆனா, எனக்கு காது கேட்காதுங்கிறதை யாராலயும் புரிஞ்சுக்க முடியலை. கிளாஸ்ல டீச்சர் நடத்தற பாடம் எதுவும் எனக்குப் புரியாது.  ‘காது கேட்காட்டி, முன்னாடி வந்து உட்காரு’ம்பாங்க. பயணம் பண்ணும்போது இன்னும் கஷ்டம். பஸ்ல ஏறியிருப்பேன். ‘டிக்கெட் வாங்கிட்டியா’னு கண்டக்டர் கேட்கறது தெரியாது. நான் கண்டுக்காம நிக்கறேன்னு திட்டுவார். ‘காது கேட்கலைனா மெஷின் வாங்கி வச்சுக்க வேண்டியதுதானே’னு நிறைய பேர் சொல்லி யிருக்காங்க. 

‘இது மெஷின் வச்சாக்கூட கேட்க முடியாத தன்மை’ங்கிறதை சொல்ல முடியாமத் தவிச்சிருக்கேன். இந்தப் பிரச்னைக்கு ‘காக்லியர் இம்பிளான்ட்’டுனு ஒரு ஆபரேஷன் இருக்கிறதா சொன்னாங்க. மண்டை ஓட்டுல ஒரு துளை போட்டு, கேட்கும் திறனுக்குக் காரணமான ஒரு நரம்பைத் தூண்டிவிட பேட்டரி பொருத்தற அந்த ஆபரேஷன் ரொம்ப ரிஸ்க்கானதுனும் அதுல நிறைய பேர் இறந்திருக்காங்கன்னும் கேள்விப்பட்டேன். அதனால அந்த ஆபரேஷன் வேணாம்ங்கிற முடிவுக்கு வந்தேன். 

பத்தாவது முடிச்ச டைம், கேட்கும் திறன் இல்லாதவங்களுக்கான பிரத்யேக ஸ்கூல் பத்திக் கேள்விப்பட்டு, அதுல என்னைச் சேர்த்தாங்க அம்மா - அப்பா. அதுக்குப் பிறகுதான் என் வாழ்க்கையில மறுமலர்ச்சி ஆரம்பமானதுனு சொல்லலாம். பிளஸ் டூவுல வணிகவியல்ல 198 மார்க்ஸ் வாங்கி, மாநிலத்துல முதல் மாணவியா வந்தேன். என்னோட குறைபாடு, என் படிப்பார்வத்தை பாதிக்காதுனு நிரூபிச்சாலும், தொடர்ந்து என்னைச் சார்ந்த பலரும் ஊக்கத்தை சிதைக்கிற மாதிரியே நடந்துக்கிட்டாங்க. அதையும் மீறி தமிழ், இங்கிலீஷ்ல டைப்பிங் முடிச்சேன். கம்ப்யூட்டர் படிக்க விரும்பினபோதும், ‘உனக்கெதுக்கு கம்ப்யூட்டர்’னு கிண்டல் பண்ணினாங்க. எதையுமே கண்டுக்காம என் விருப்பப்படி கம்ப்யூட்டர் படிச்சேன். 

கேட்கும் திறனில்லாத பெண்களுக்கு டைப்பிங், எம்பிராய்டரி மாதிரியான விஷயங்கள்ல பயிற்சி கொடுத்தேன். எல்லாருக்கும் சைகை மொழி புரிஞ்சிடும்னு சொல்ல முடியாது. புரியாதவங்களுக்கு நடிச்சுக் காட்ட வேண்டியிருக்கும். 

பொதுவா நாம மத்தவங்களோட பேச்சைக் கேட்டுக் கேட்டுத்தான் மொழியைக் கத்துக்கறோம். கேட்கும் திறனில்லாதவங்களுக்கு இதுவும் கஷ்டம். பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. இந்த எல்லா விஷயங்களும் சேர்ந்து அவங்களுக்குள்ள ஒரு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அவங்களுக்கு கவுன்சலிங் கொடுக்க ஆரம்பிச்சேன். அப்படி அவங்கக்கிட்ட பேசும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகள்ல சிறப்புச் சலுகைகள் இருக்கிற விஷயத்தையும் சொல்வேன். 

‘நமக்கு ஏன் அரசாங்க வேலை கிடைக்கலை’ங்கிற கேள்வி ஒரு நாள் எனக்கே வந்தது.  அதன் தொடர்ச்சியா முயற்சி எடுத்ததுல அஞ்சல் துறையில சார்ட்டிங் அசிஸ்டென்ட் வேலை கிடைச்சது...’’ என நிறுத்துகிற ஜெயஸ்ரீ, வேலை கிடைத்துவிட்டதிருப்தியில் அத்துடன் அமைதியாகிவிடவில்லை. முன்னைவிட அதிக வேகத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

‘‘எனக்கு நைட் ஷிஃப்ட் வேலை. நிறைய நேரம் கிடைச்சது. அந்த நேரத்தை எங்க டிரஸ்ட் பணிகளுக்காக ஒதுக்கினேன். சைகை மொழி கத்துக் கொடுக்கிறது, சுயதொழிலுக்கான பயிற்சிகள் கொடுக்கிறது, கவுன்சலிங்னு என்னை பிஸியா வச்சுக்கிட்டேன். டிடிபி, மல்ட்டி மீடியா, அனிமேஷன்னு என் கம்ப்யூட்டர் அறிவையும் வளர்த்துக்கிட்டேன். கேலிபர் டிரஸ்ட்டை சேர்ந்த பலருக்கும் தனியார் நிறுவனங்கள்ல வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கோம். எத்தனையோ பேர் என் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் சிதைச்ச போதும், அதையெல்லாம் ஒதுக்கிட்டு நான் மேல வந்துட்டேன். என் குறையை நினைச்சு நான் என்னிக்கும் மூலையில முடங்கினதில்லை. ஆனாலும், என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் சந்திக்கிற கஷ்டங்கள் குறித்த கவலை அதிகமா இருக்கு. உதாரணத்துக்கு தமிழ்நாட்ல மட்டுமே 8 லட்சம் பேர் கேட்கும் திறன் இல்லாதவங்க. ஆனா, இன்னிக்கு வர்ற படங்கள்ல சப் டைட்டில்ங்கிற ஒரு விஷயமே இருக்கிறதில்லை. 

பொழுதுபோக்குங்கிற விஷயம் எங்களுக்கும் அவசியம்னு யாரும் நினைக்கிறதில்லை. அடுத்து சைன் லேங்வேஜ். எந்த வேலைக்குப் போகும் போதும் தாய்மொழி தவிர கூடுதல் மொழிகள் தெரிஞ்சு வச்சிருக்கிறதை ஒரு சிறப்புத் தகுதியா பார்க்கிறவங்க, சைகை மொழியையும் அப்படிப் பார்க்கலாம். டிக்கெட் கவுன்டர்ல கேட்கும் திறனில்லாதவங்களுக்காக ஒரு பகுதியை ஒதுக்கலாம். தனியா பயணம் பண்றவங்களுக்கு இது உதவியா இருக்கும். கை, கால் ஊனமானவங்களுக்கு  அரசாங்கம் ஸ்கூட்டர் கொடுக்கிற மாதிரி கேட்கும் திறன் இல்லாத எங்களுக்கு ஸ்மார்ட் போன் கொடுக்க ஏற்பாடு செய்யலாம்... இப்படி இன்னும் நிறைய தேவைகள் இருக்கு’’ என்கிற ஜெயஸ்ரீ, தனது டிரஸ்ட் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச சைகை மொழிப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். 

‘‘சைகை மொழியை பள்ளிக்கூடப் பாடத்திட்டத்துல சேர்க்கணும். இதுதான் என்னோட நீண்ட நாள் கோரிக்கை. அமைதியான எங்க உலகத்துல அர்த்தத்தோட ஒரு வாழ்க்கையை வாழ இது பெரியளவுல கை கொடுக்கும்...’’ அவசிய கோரிக்கையுடன் முடிக்கிறார். 

No comments: